கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, September 17, 2007

பின் நவீனத்துவம்

எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று(17-செப்-07) மக்கள் தொலைக்காட்சியில் கால்வினோ சிறுகதைகள் என்ற நூலை அறிமுகப் படுத்தி பேசினார்.இத்தாலியரான கால்வினோ மிகச்சிறந்த பின்னவீனத்துவ எழுத்தாளர்களில் ஒருவர் என்றதோடு பின்னவீனத்துவம் என்றால் என்ன என்றும் சிறிது விளக்கினார்.அவர் விளக்கியதன் சிறுகுறிப்பு:



1) பின்னவீனத்துவம் ஒரு பொருளை,கருத்தை நேர்க்கோட்டில் விளக்கிச் சொல்லாது.



2) ஆசிரியர் ஒரு பொருளைப் பற்றி எழுதுகிறார்.அதை அவருடைய சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறார்.வாசகரும் அவ்வாறே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளலாம்.



3) ஒவ்வொருவரும் தனது எண்ணங்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ளமுடியும் என்பதால்,ஆசிரியர் ஒரு படைப்பை வெளியிட்டவுடன் அவருக்கே அதன் மீதான உரிமை போய்விடுகிறது.அந்தப் படைப்பு சமூகத்திற்கானதாகி விடுகிறது.



பிரபஞ்சனின் இந்த விளக்கம் , பின்னவீனத்துவ பெருங்கடலில் தவறி விழுந்தவனின் கைக்கு சிக்கிய ஒரு மரக்கட்டையைப் போல் உதவுகிறது.

பின் நவீனத்துவம் பற்றிய எனது புரிதல்:

பின் நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கிறது.இப்போது உள்ள சூழ்நிலையை பின் நவீனத்துவ காலம் எனலாம்.இதற்கு முந்தைய நிலையை நவீன காலம் என்றும் ,அதற்கு முந்தைய நிலையை முன் நவீன காலம் எனவும் கொள்ளலாம்.

(இந்த சொல்லாடல்கள் எல்லாம் மேற்குலகத்தினருக்கே மிகவும் பொருந்தும்.இந்தியா போன்ற நாடு இன்னும் நவீன காலத்திற்கே வரவில்லை என்று தான் தோன்றுகிறது.)

முன் நவீன காலம் என்பது,மனிதகுலம் தோன்றியதிலிருந்து கி.பி.1600 ஆம் ஆண்டு வரையிலான காலமாக புரிந்து கொள்ளலாம்.மனிதனின் அறிவு வளர்ச்சி மெதுவாக,சீராக இருந்தது.கலை,இலக்கியம்,அறிவியல்,பொருள் உற்பத்தி ஆகியவற்றில் மகத்தான பல சாதனைகள் மனிதனால் படைக்கப் பட்டன.இந்தக் கட்டத்தில் மதமும்,ஆன்மீகமும் மனித சிந்தனைகளை கோலோச்சிக் கொண்டிருந்தது.முன் நவீன காலத்தின் முக்கிய கூறாக மதம்,ஆன்மீகம் இருந்தது,அறிவியல் பூர்வமான அணுகுமுறை அதற்கு அடுத்த இடத்திலேயே இருந்தது.

கலிலியோவிற்கு பின்னால் நவீன காலம் பிறந்தது.பூமி சூரியனை சுற்றுகிறது என்ற உண்மையை சொன்னதற்காக வீட்டுச்சிறை வைத்து கொல்லப்பட்டார்.அதற்குப் பின் அறிவியல் உலகை ஆளத்தொடங்கியது.நவீன காலத்தின் சிறப்பாக அறிவியலை சொல்லலாம்.அப்படியானால் முன் நவீன காலம் வரையிலான மனிதன் அறிவில் குறைந்தவனா,மாபெரும் சாதனைகளை செய்யவில்லையா
என்றால்,அதுவரை செய்யப்பட்ட அனைத்து படைப்புகளையும்,சாதனைகளையும் ஜுஜுபி மேட்டர்
என்று சொல்லும் விதத்தில் இந்த 300,400 ஆண்டுகளில் மனிதன் செய்துவிட்டான்.

(இந்த 300,400 ஆண்டுகளில் இந்தியாவின் பங்கு ஒன்றுமேயில்லை எனலாம்)

நவீன காலத்தில் மார்க்ஸ்,டார்வின் ஆகியோர் ஆளுமை செய்தனர்.
மேலும் ஆடம் ஸ்மித்,பேக்கன்,நியூட்டன்,ஹெகல்,காண்ட் போன்ற அறிவியல்,தத்துவ ஞானிகளும் பெரும் பங்காற்றியுள்ளனர்.

இந்த நவீன காலம் இன்றும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.ஆனால் காதல் படத்தில் சான்ஸ் கேட்டு வருகிறவனிடம்,உன்னிடம் இருந்து இன்னும்,இன்னும் எதிர்பார்க்கிறேன் என்று ஒருவர் கூறுவாரே அதைப்போன்று நவீன சிந்தனைகள் போதாது இன்னும்,இன்னும் மேலே போக வேண்டுமென்று சில அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.இத்தகைய அறிஞர்களிலும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள்.நவீனத்துவத்தையே முற்றிலும் மறுத்து புதியபாதையில் செல்பவர்,
மற்றும் நவீனத்துவத்தையே வளர்த்து அதனுடைய நீட்சியாக,அதனுடைய அடுத்த கட்டமாக கருதி
செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.இந்த இரு வகையினருமே பின் நவீனத்துவ அறிஞர்கள் எனலாம்.

பின் நவீனத்துவம் என்பது கலை,இலக்கியம்,அறிவியல் என அனைத்து துறைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.தமிழுலகில் எழுத்துத் துறையில் மட்டும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.

பி.கு:
இந்தியா இன்னும் நவீன சிந்தனைகளையே ஏற்றுக்கொள்ளவில்லை.ராமர் பாலம் கட்டினார் என்று ஒரு கூட்டம் சொல்வதும் ,அதை மந்தைக்கூட்டம் மண்டையையாட்டி வரவேற்பதும் கேவலமாக உள்ளது.நவீன சிந்தனைகளை படைப்பதும்,பரப்புவதும் நம்முன் இருக்கும் அவசியத் தேவைகள்.

35 comments:

said...

Hey this one is great post!

said...

வருகைக்கும் ,பாராட்டுக்கும் மிக்க நன்றி செல்லா.

said...

வள வளக்காமல் தெளிவாக சொல்லி இருக்கிங்க , ஆனா பின்குறிப்பில் சொன்னது பொருத்தமாக இல்லை , மேற்குலகிலும் இது போன்று பல மூட நம்பிக்கைகள் இருக்கிறது.

உதாரணமாக கிருத்துவ மத நம்பிக்கை படி இறந்தவர்கள் மீண்டும் இறுதி தீர்ப்பு நாளின் போது உயிர்த்தெழுவார்கள் என எரிக்காமல் புதைக்கிறார்கள் அப்போது தான் , உயிர்த்தெழ வைப்பாரம் தேவன்!

இப்படி கல்லறைகளாக இருப்பதால் இடம் இல்லாமல் பல இடங்களில் புதைக்க முன் பதிவு எல்லாம் செய்யப்படுகிறது.

ஏன் நவீன சிந்தனையாளர்கள் அதை எல்லாம் மாற்றிக்கொள்ளவில்லை.

இன்னும் சில பிரிவில் ரத்த தானம் செய்வதை கூட தடுக்கிறது. இதை எல்லாம் நவீன மேலை நாடுகள் தான் பின் பற்றுகின்றன. இன்னும் அங்கே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்து விட்டால் அலறுவார்கள்!

மூட நம்பிக்கை எங்கும் இல்லாமல் போக வேண்டும் என்பதே ஆசை.ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இன்னும் இருக்கிறது என்பது போல தொனியில் சொல்வது தான் எல்லாருக்கும் பழகிவிட்டது :-))

said...

வருக வவ்வால்,
//ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இன்னும் இருக்கிறது என்பது போல தொனியில் சொல்வது தான் எல்லாருக்கும் பழகிவிட்டது :-))//

விரக்தி தான், வேறென்ன?மேற்கு காட்டுமிராண்டியாக இருந்த போது உலகின் தலை சிறந்த நாகரீகமாக நாம் இருந்தோம்.அந்த உன்னத நிலையை மீண்டும் அடைய முடியாதா?

இன்னும் பழம்பெருமையையும்,பத்தாம்பசலித் தனமான கருத்துகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோமே.

said...

எளிமையான விளக்கம்...

பாராட்டுக்கள்..பின் நவீணத்ததவம் என்பது ஒரு சிதத்தாந்தமோஅல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. அது ஒரு மையமிழந்த சமுகம் பற்றிய வர்ணணையே.

said...

பின்நவீனத்துவம் குறித்த எனது புரிதல்கள் வேறு மாதிரியாக இருக்கிறது :-)

மனிதகுலத்தில் அவரவர் வசதிக்கேற்ப கட்டமைப்பக்கப்பட்ட கருத்தாக்கங்களை கட்டுடைத்தலையே பின்நவீனத்துவம் என்பதாக நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அதனாலேயே தந்தை பெரியாரை பின்நவீனத்துவ வாதிகள் பீடத்தில் ஏற்றி வைத்திருக்கின்றனர்.

சுகுணாவோ, அய்யனாரோ, வளர்மதியோ ஒரு பதிவு போட்டு நம் டவுசரை கிழிக்காமல் விளக்கினார்கள் என்றால் புண்ணியமாகப் போகும்.

இதுகுறித்த உங்கள் பதிவு எளிய வார்த்தைகளால் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.

said...

உண்மையை சொல்வதென்றால் வலைப்பதிவுகளில் இதுவரைக்கும் உண்மையில் பின் நவீனத்துவமாக எழுதுபவர்கள் யாருமே இல்லை. அதை விட அதை பேசுகிறேன் என்று தத்தக பித்தக்க என்று உளறிக்கொட்டுபவர்கள் தான் அதிகம்!

கட்டுடைத்தல் என்பது ஒரு தனி கூறு, பின்னவினத்துவம் என்பது தனிக்கூறு கட்டுடைப்பது தான் பின்னவினதுவம் என்று நம்பும் மக்கள் இருக்கும் இங்கே எப்படி உண்மையான பின் நவினத்துவம் வரும்?

ஒரு கருத்தை புதிய முறையில் விளக்குகிறேன் என்று சொல்வதற்கு அதனை கட்டுடைக்கிறேன் என நம்ம ஊரு பின்னவினத்துவக்காரர்கள் சொல்லப்போக இப்பொழுது கட்டுடைப்பது தான் பின்னவினத்துவம் என ஆகிவிட்டது போலும்.

இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இணையானது ஆனால் ஒன்றல்ல. கட்டுடைத்தல்(deconstructionism) என்பது கிட்டத்தட்ட reverse engineering என்பது போல எதனையும் விளக்க ,அதன் உட்பொருளைக்காட்ட , பிரித்து மேய பயன்படுத்தலாம். அதை அதிகம் பயன் படுத்திக்கொண்டது நம்ம பி.ந காரர்கள் தான். ஒரு வகையில் பார்த்தால் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கூட கட்டுடைப்பவர் தான்!

தொன்மையாக நிலவி வரும் கருத்தை விளக்கி உண்மையை வெளிக்கொணருதல் தான் கட்டுடைத்தல் என்பது எனது புரிதல்.புராணங்களை வைத்து ஏமாற்றுவது என்ற கருத்தாக்கத்தை உடைத்தவர் பெரியார் எனவே அவரும் கட்டுடைப்பவர் தான். ஆனால் அவர் பின் நவினத்துவக்காரர் ஆவாரா?

பின் நவினத்துவத்தைப் பற்றி அதிகம் பேசப்போனால் நீ பின் நவினத்துவம் படிச்சியா என கேள்வி கேட்பார்கள். ஆரம்ப கால உண்மையான பின் நவினத்துவக்காரர்கள் மற்ற எந்த பின் நவினத்துவ நூலையும் படிக்காமல் படைத்தவர்கள் தான். அதனாலேயே அவர்கள் எழுதியது எல்லாம் சுயமாக இருந்தது. இன்றும் கூட பலரும் அடுத்தவர்கள் எழுதியதைப்படிப்பது இல்லை. அப்படி படித்தால் அதன் சாயல் தான் வரும். ஆனால் வலைப்பதிவில் பலரும் பி.ந என சொல்லிக்கொண்டு அதைப்படித்தாய இதைப்படித்தாய என்று கேட்கிறார்கள். அப்படிக்கேட்பவர்கள் பி.ந வாசகர்கள் ஆக தான் மாற முடியும் பி.ந படைப்பாளியாக முடியாது.

அதிகம் வாசித்தால் நன்றாக எழுதலாம் என்பதே ஒரு மாயை , அது நமது சுயத்தை பாதிக்கும். ஆனால் தொழில் நுட்ப விவரங்கள் , வரலாறு ,நிலத்தின் பண்பு, மக்கள் கலாச்சாரம் போன்று நாம் எழுதுவதைப்பலப்படுத்தும் விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதை வாசிக்கலாம் அப்படி செய்யாமல் இன்னொரு பின்னவினத்துவ நூலை மட்டும் படித்துவிட்டு நானும் ஒரு பின்னவினத்துவ வாதினா :-))

அதாவது ஒரு பின்னவினத்துவ படைப்புக்கு இன்னொரு பின்னவினத்துவ படைப்பை உள்ளீடாக பயன்படுத்தும் அவலம் தான் இங்கே நிலவுகிறது!

said...

புரியும் வார்த்தைகளில் எளிமையாக எழுதப்பட்டிருப்பதால் இதைப் பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையாக எடுத்துக்கொள்ள முடியாது:)

said...

"சேச்சே!இஃதொன்றும் வஞ்சகத்தாருக்குரியதன்று-நிந்திப்பாருக்கான நிலைப்படுத்தலை இற்றுவரை ஏந்திப்பிடித்தலும்,அதன் பின்பான பராக்கிரமத்தைக் குறித்து மகுடம் சூடிக்கொள்ளக் கனவைத் தனதாக்கிக் கட்டியணைக்கும் சில வெட்டுப் ப+ச்சிகளுக்குச் சிறகொடிப்பதற்கான முயற்சியில் விந்தியத்துக்கு முந்தின முயற்சிகளிலொன்றென்றால் மிகையிருக்குமாவென்ன?அப்பப்ப பாடித்தானாகணுமெனுங் நல்ல மனதின் நன்றியறிதலைக் குறித்த கவனக் குறிப்பொன்றைச் சொல்வதற்குத் தகுதியுடை மாமனிதரைக்காணுமொரு வழித் தேடலில் நன்றிக்கும்-நல்ல மனதிற்கும் பாத்திரமுடையவரான நம்ம ராகவச்சாரியார் நாலுந்தெரிந்தபோது"இஸ்ரேலுக்கான விசுவாசத்துள் தன் வேரைக் கண்டடைந்து"நான் வடகலைக்குரிய இஸ்ரேலியப் பரம்பலின் பண்டையப் பு(ர)ட்டு எனுங்கால்-வாழ்த்துவதும் தோதுபெறுமெனத் தகுமல்லவா?"

கண்ணகட்டுது ,தல சுத்துது,
இது என்னா அயிட்டம் தலீவா?

பின்னா , முன்னா , ஊடுவேலையா ?

நன்றி: நிர்மாணம்,tbcd.

said...

//ஜமாலன் said...
எளிமையான விளக்கம்...

பாராட்டுக்கள்..பின் நவீணத்ததவம் என்பது ஒரு சிதத்தாந்தமோஅல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. அது ஒரு மையமிழந்த சமுகம் பற்றிய வர்ணணையே.//

நன்றி ஜமாலன்,உங்கள் கருத்தைப் புரிந்துகொள்ள நிறைய வாசிப்பனுபவம் தேவைப்படும்.

said...

நன்றி லக்கி,பின்னவீனத்துவத்தின் முக்கியகூறாக கட்டுடைப்பு உள்ளது.அதுமட்டுமே பின்னவீனத்துவம் அல்ல.பின் வரும் வவ்வால் வரிகள் அதை விளக்குகிறது.

//ஒரு கருத்தை புதிய முறையில் விளக்குகிறேன் என்று சொல்வதற்கு அதனை கட்டுடைக்கிறேன் என நம்ம ஊரு பின்னவினத்துவக்காரர்கள் சொல்லப்போக இப்பொழுது கட்டுடைப்பது தான் பின்னவினத்துவம் என ஆகிவிட்டது போலும்.//

said...

//புராணங்களை வைத்து ஏமாற்றுவது என்ற கருத்தாக்கத்தை உடைத்தவர் பெரியார் எனவே அவரும் கட்டுடைப்பவர் தான். ஆனால் அவர் பின் நவினத்துவக்காரர் ஆவாரா? //

நிச்சயமாக வவ்வால்.பழைய உலகின் டவுசரைக் கழட்டியவர் அவர்.இல்லையா?

said...

//புரியும் வார்த்தைகளில் எளிமையாக எழுதப்பட்டிருப்பதால் இதைப் பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையாக எடுத்துக்கொள்ள முடியாது:)//

வாங்க ஆழி,பின்னவீனத்துவம் என்றாலே அது புரிந்து கொள்ள முடியாதது என்று ஆகிவிட்டது.ஆனால் தீவிர இலக்கிய ஆர்வலர்கள் புரிந்துகொண்டு தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்கிறார்கள்.

பி.ந வை புரிந்துகொள்ள தீவிர வாசிப்பு அனுபவம் தேவை.

said...

//nice post//

நன்றி முரளிகண்ணன்.

said...

//கண்ணகட்டுது ,தல சுத்துது,
இது என்னா அயிட்டம் தலீவா?

பின்னா , முன்னா , ஊடுவேலையா ?//

ஒ.மனிதன்,பின்னும் இல்லை,முன்னும் இல்லை.அழகிய தமிழ்மகன் இவர் என்று சொல்லலாம்.அருமையான தமிழ் நடையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

said...

பின்நவீணத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல (தயவுசெய்து நான் படித்தவரை என்பதை வரிக்கு வரி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பின்நவீணத்தவ பிராண்டு மேனேஜர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது.) அதற்கென கோட்பாட்டு பார்வை இருந்தால் மட்டுமே அதனை ஆய்வுமுறையாக பயன்படுத்த முடியும். உதாரணமாக பெரியாரியம். அது பிரதியை பகுத்தறிவு அடிப்படையில் அலசும் ஒரு ஆய்வுமுறையை நமக்குத் தருகிறது. மார்க்சியம் - பிரதியை சமூகத்தின் வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்யச் சொல்கிறது. அமைப்பியல்- பிரதியின் உள் இயங்கும் பல அமைப்பு மையங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுமுறை. இது மார்க்சியம் பெரியார் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைஉருகின்றன என்பதை ஆய்வு செய்வதாகும்.

பின் அமைப்பியம் கிழ்கண்ட முறையியலைக் கொண்டது.

1. அதிகாரம் பற்றிய சொல்லாடல் ஆய்வு -பூஃககோ
2. அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் பற்றிய ஆய்வு - லக்கான்
3.சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு - தெரிதா. (deconstruction என்பதற்கு இத்தனை வார்த்தைகள் தமிழில் ஏன் என்றால் அதன் ஆய்வு முறையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்தான்).

அதாவது, செவ்வியல் பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப் படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான்.

பிரதி என்றவுடன் எழுதப்பட்ட இலக்கியவகைமை மட்டுமல்ல.. எல்லாமே பிரதிதான் என்பதுவே பின் அமைப்பியலின் நிலைப்பாடு. மனிதன் என்கிற கருத்தாக்கம்கூடஒரு பிரதிதான். இதன்பொருள் செவ்வியல் காலம் என்கிற 19-ஆம்நூற்றாண்டிற்கு முன்பு மனிதன் என்கிற பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லை. அல்லது உலக மனிதனை உய்விக்கும் தத்தவ பொதுமைகள் இல்லை. அதற்கு பகரமாக மனித உடல்களை குறிக்கும் பல சொல்லாடல்கள் இருந்தன. உதாரணமாக அடிமை, ஆண்டான் அல்லது சாதிய அடையாளப் பெயர் இன்னபிற..

இப் பின் அமைப்பியல் முறையியலை பின் நவீணத்துவ விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை முன் கொண்டு வருகிறார்கள். பின்நவீணத்துவ படைப்புகள் இம்மையமிழந்த சமூக அவலம் பற்றிய விவரணைகளை வெளிக் கொண்டுவருகிறது.

அய்யனார் போன்ற பதிவுலக எழுத்தாளர்கள் இம்மையமிழந்த மொழிநடைக்கான முயற்சியை செய்கிறார்கள். இது ஒரு மனப்பிறழ்ச்சியான எழுத்து நடை. அவரை முழுமையாக படித்த பிறகே அதைப்பற்றி பேசமுடியும்.

புரியாமை என்பது கோட்பாட்டின் சிக்கலுடன் உள்ள ஒரு பண்பு என்பதையும் மறந்துவிடலாகாது. அதே சமயம் எழுத்தாளனின் புரிதலும் புரியாமையை உருவாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இட்டாலோ கால்வினோ தனது புலப்படாத நகரங்கள் nvisible city என்கிற நாவலில் உலகின் பல நகரங்கள் பற்றிய வர்ணனையை தருகிறார். அதில் நீங்கள் சென்னை முதல் காசி மாநகர் வரை எல்லாவற்றையும் கண்டு கொள்ளலாம். அந்நகரங்களின் பெயர்களை அதன் பண்படிப்படையில் விளக்குகிறார்.

நீண்ட... பின்னொட்டங்களை தவிர்ப்பது எப்படி? என்ற யோசித்துக் கொண்டிருப்பதால் இத்தடன்
ஆட்டத்தை கலைத்துக் கொள்கிறேன்...

பொறுமைக்கு நன்றி.

ரொம்ப தலைசுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல..

அனபுடன்
ஜமாலன்

said...

ஜமாலன்,
//அமைப்பியம் ,அதிகாரம் பற்றிய சொல்லாடல் ,அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் ,சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு//
இந்த சொற்களும்,அவற்றுக்கான சிறு விளக்கங்களும் பின்நவீனத்துவத்தை புரிந்து கொள்ள நம்பிக்கையையும்,உற்சாகத்தையும் தருகின்றன.

தமிழ்,தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைசிறந்த சில படைப்புகளின் பெயர்களை இங்கே குறிப்பிடுங்களேன்.

said...

வலையில் பின் நவீனம் குறித்து பேச,பகிர மகிழ்வாய் இருக்கிறது. எளிமையாய் சொல்லப்போனால் மாற்று சிந்தனை மாற்று இலக்கியம்/கலை/அரசியல் இவற்றிர்கான தேவை நம் சூழலில் இப்போதிருக்கிறது அதற்கான தொடக்கங்கள் தாம் இந்த மேற்கத்திய சிந்தனைகள்...

வரையறுத்தல் என்பது மிகவும் சலிப்பாய் இருக்கிறது..இதென்ன? இதன் பயன் யாது ? படம் போட்டு விளக்கு..பாகங்களை குறி ன்னு கேக்கும்போதெல்லாம் சின்னதா ஒரு கோபம் கிளைவிடுது..
எல்லாவற்றிர்கும் ஒரு வரையறை நமக்கு வேண்டும் அப்படி இல்லையென்றால் அது அதுவாய் இல்லை..

நம்மிடையே இருக்கும் பொதுவான புத்தி மாற்றங்களை அனுமதிக்காதது..இது பழகிய மூளையின் தவறே தவிர வேறொன்றுமில்லை..பழக்கப்படாத இடத்தில் தூக்கம் வராததைப்போன்று வழமையான மொழிநடை சற்று பிசகும்போது கோபம் வருகிறது..

புரியாத கருமத்திற்கு பெயர் பின்நவீனம்.. ஆபாச சொற்பிரயோகமா பின்நவீனம்..(மொதல்ல பின்நவீனம்னு தப்பில்லாம எழுதவாச்சிம் கத்துங்கங்க மக்கா அப்புறமா அத எழுதும் நாதாறிகள திட்டலாம்)நாம் எல்லாத்துக்கும் ஒரு லேபிள் கொடுத்து பழகிட்டோம்..

யாரும் யாரையும் ஒத்துக்கிறதில்ல..சண்டை பூசல் பொறாமை ன்னு தமிழிலக்கிய சூழல் நிறைய மேதாவி தனங்களோடும் குறுகிப்போன மனோநிலைகளோடும் செறிவாய் இயங்கிட்டிருக்கு.. எல்லாத்தையும் அரைகுறையா மேம்போக்கா புரிந்து கொள்ளும் கூட்டம் இலக்கியவாதிகளை விமர்சித்து தனக்கான இடத்த தக்கவச்சிக்குது ..

எழுத்தாளன் செத்த பின்பு சிலை வைப்போம் இருக்கும்வரை செருப்பாலடிப்போம்..

இப்போதென்ன அவசரம் இந்த பின் நவீனம் சிதைந்து வேறென்று வந்த பின்பு மெதுவாய் பேசிக் கொள்ளலாம்..(இன்னமும் நாம் புதுக்கவிதை காலத்திலிருந்தே வெளிவரவில்லையே)

ஜமாலனின் விளக்கங்கள் நன்றாக இருக்கிறது..பன்முகத் தன்மை,பேசாப் பொருளை பேசுதல்,அதிகாரம் பரவலாக்கப்படுதல்,வரலாற்றை சந்தேகித்தல்,என பின்நவீனத்துவ நிலைப்பாடு தொட்டு செல்லும் பரப்பு மிகப் பரந்தது...

/உண்மையை சொல்வதென்றால் வலைப்பதிவுகளில் இதுவரைக்கும் உண்மையில் பின் நவீனத்துவமாக எழுதுபவர்கள் யாருமே இல்லை. அதை விட அதை பேசுகிறேன் என்று தத்தக பித்தக்க என்று உளறிக்கொட்டுபவர்கள் தான் அதிகம்!/

வவ்வால் இதைபோன்ற ஸ்டேட்மெண்டெல்லாம் உங்களால மட்டும்தான் விட முடியும் நன்றி..

said...

யோவ்.. பின்னூட்டத்திலயும் உளரலா!

said...

//பன்முகத் தன்மை,பேசாப் பொருளை பேசுதல்,அதிகாரம் பரவலாக்கப்படுதல்,வரலாற்றை சந்தேகித்தல்,என பின்நவீனத்துவ நிலைப்பாடு தொட்டு செல்லும் பரப்பு மிகப் பரந்தது...//
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அய்யனார்.

said...

சுயத்தின் நேர்மையான வடிவம் எவ்வித பூச்சுகளுமில்லாத உளறலாகத்தான் இருக்கமுடியும் இல்லையா :)

said...

இங்கேயும் கரைசல் தொடங்கிடிச்சா?

said...

அய்யனார்,

நான் விடும் ஸ்டேட்மெண்ட் இருக்கட்டும் உங்களின் ஸ்டேட்மெண்ட் உங்களின் புரிதலின் ஆழத்தை அம்பலமாக்குகிறதே,

//இப்போதென்ன அவசரம் இந்த பின் நவீனம் சிதைந்து வேறென்று வந்த பின்பு மெதுவாய் பேசிக் கொள்ளலாம்..(இன்னமும் நாம் புதுக்கவிதை காலத்திலிருந்தே வெளிவரவில்லையே)//

போமா இறந்து விட்டார் என்று ஓசை செல்லா கூட ஒரு பதிவு போட்டுள்ளார் பாருங்கள். பின் நவினத்துவம் முடிந்து அடுத்த சுற்று ஆரம்பம் ஆகிவிட்டதாக ரொம்ப முன்னரே சொல்லிட்டாங்க, இப்போ இருக்கிறது "pseudo- postmodernism" என்றும் சொல்கிறார்கள்.(there is one book called "the death of postmodernism and beyond")

நாளு பின் நவினம் , அதன் ஆசிரியர்களை மட்டும் தெரிந்து கொண்டு நல்லாப்பாருங்க நாங்களும் பின் நவீனம் னு சொல்லிக்கிறவங்க தான் அதிகம் ஆகிட்டாங்க :-))

said...

//தமிழ்,தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைசிறந்த சில படைப்புகளின் பெயர்களை இங்கே குறிப்பிடுங்களேன்//

ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாது. நான் கொஞ்சம் இங்கிலீஸ்ல வீக்கு. தமிழில்..தமிழவனின் ஸ்டக்சுரலிஸம், தமிழும் குறியியலும், எம்.டி.எம்.-மின் பின் அமைப்பியல் குறித்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக பாடநூல், பிரேம்-ரமேஷின் பின்நவீனத்துவம் என்கிற மொழப்பெயர்ப்பு நூல், அ.மார்க்ஸின் 90-களுக்கு பிந்தைய நூல்கள் இப்படி நிறைய உள்ளது.. நினைவில் உள்ளவை இவ்வளவுதான். குறிப்பாக தமிழ் சிறுபத்திரிக்கைகள் நிறைய பேசி உள்ளன 85-துவங்கி..

குறிப்பாக அமைப்பியல் துவங்கி பின்நவீனத்துவம் வரையிலான பேசுபொருள்கள் அத்தனையும் மொழி குறித்த விசாரணை(னை)யில்தான் துவங்குகின்றன.(எந்த? ண/ன). மொழிதான் உலகின் அடிப்படை கட்டுமானமாக இருக்கிறது என்பதே இச்சிந்தனைகளின் அடிப்படை அனுமானம். இதை இவை தனது தர்க்கங்களின் மூலமும் ஆய்வுகள் மூலமும் நிரூபித்தும் உள்ளன.

மொழி குறித்த வாசிப்பே இவற்றை புரிந்துகொள்ள அடிப்படை.

பின்னோட்டத்தை விரிவாக்குவதில்லை என்று நேற்றுதான் சபதமெடுத்துள்ளேன் அதனால்.. விரிவாக நான் ஒரு பதிவு போட்டுவிட்டு அப்பால பேசுவோம்.

ஆமா நீங்க என்னவச்சி காமடி கீமடி எதுவும் பன்னுலியே.. (மிண்டும் ண/ன)...

said...

//தமிழவனின் - ஸ்டக்சுரலிஸம்,
பிரேம்-ரமேஷின் பின்நவீனத்துவம் என்கிற மொழப்பெயர்ப்பு நூல், அ.மார்க்ஸின் 90-களுக்கு பிந்தைய நூல்கள் //

நன்றி ஜமாலன்.

said...

/பின் நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கிறது.இப்போது உள்ள சூழ்நிலையை பின் நவீனத்துவ காலம் எனலாம்.இதற்கு முந்தைய நிலையை நவீன காலம் என்றும் ,அதற்கு முந்தைய நிலையை முன் நவீன காலம் எனவும் கொள்ளலாம்./

இல்லை. மிகத் தவறான புரிதல்.

/பின்னவீனத்துவத்தின் முக்கியகூறாக கட்டுடைப்பு உள்ளது.அதுமட்டுமே பின்னவீனத்துவம் அல்ல./

இதுவும் தவறான புரிதல்.

I request you to read valar's articles that are available in the net to understand pomo better.

said...

வருகைக்கு நன்றி ஜோவ்ராம் சுந்தர்.வளர்மதியின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

said...

ஜமாலன் மற்றும் வவ்வால் ஆகியோரின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. அதிலும் குறிப்பாக வவ்வால் இவ்வளவு சீரியசான ஆள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அய்யானாரின் சில கருத்துக்கள் ஏற்கத்தக்கவைதான் என்றாலும் ஏன் அவர் இந்த எழுத்தாளன்களைப் பிடித்துத் தொங்குகிறார் என்பது தெரியவில்லை. ஏன், எழுத்தாளன் இருக்கும்போதோ, செத்தபின்னாலோ செருப்பாலடித்தால் என்ன தவறு?
இதற்குமேலும் எழுத ஆசைதான். ஆனால் ஜமாலனுக்கு இருக்கும் அதே பிரச்சினைதான் ((-

/(தயவுசெய்து நான் படித்தவரை என்பதை வரிக்கு வரி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பின்நவீணத்தவ பிராண்டு மேனேஜர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது./

said...

கருத்துப் பகிர்வுக்கு நன்றி சுகுணா.

said...

திருவாளர் வெளியே மிதக்கும் அய்யா அவர்களே!

ஜாலிஜம்பரும் நானில்லை, இலைக்காரனும் நானில்லை. என்னை தனிமடலில் பெண்டு நிமிர்த்த வேண்டாம். இது பின்நவீனத்துவ பிதா டெரித்தா மீது சத்தியம்!

said...

பதிவு புரிஞ்சிது...

said...

//தருமி said...
பதிவு புரிஞ்சிது...//

அப்படின்னா,உங்களுக்கு டபுள் ப்ரமோஷன்.பின்நவீனத்துவ ஸ்கூல்ல ரெண்டாங்கிளாஸ்ல போய் உட்கார்ந்துக்குங்க.:-))

said...

பின் நவீனம் இறந்து விட்டது
ஆசிரியன் இறந்து விட்டான்
கவிதை செத்து விட்டது
கடவுள் இறந்து விட்டான்
..... ....
எல்லாம் முடிந்தபின்
என்னதது பறந்து கொண்டிருக்கிறது...
... வவ்வால்.

said...

என்னய்யா... மாத்தி மாத்தி சின்ன புள்ள தனமா சண்டை போட்டுக்கிட்டு...

நான் விளக்கறேன் பாருங்க

எதையாவது எழுதுங்க..

கொஞ்ச பெருக்கு புரியுது.. கொஞ்ச பேருக்கு புரியலையா.. அது சாதா நவீனம்யா...

எழுதின உங்களுக்கு மட்டும் புரியுது வேற யாருக்குமே புரியலையா?

அது முன் நவீனத்துவம்

எழுதின உங்களுக்கே புரியலையா?

அதான்யா பின் நவீனத்துவம்...

:-)

said...

இன்னுமாய்யா விடல இத... அய்யோ அய்யோ...

எதையும் ஆழமாக புரிந்து கொள்ள மூளையை கசக்காமல்... அல்லது புரியாத ஒன்று என்பது நமது புரிதல் சம்பந்தப்பட்டது என்கிற சுய ஒதுங்குதல்கூட இல்லாமல் கருத்து சொல்வது சரியா?

மாயன் அருமை..
எப்பொழுது நீங்கள் பின்நவீனத்துவ வாதியானீர்கள்.

பின்நவீனத்துவம் செத்தவிட்டதா? உயிரடன் இருக்கிறதா? என்கிற அணாட்மிக்கல் அல்லது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எனது பதிவில்...

அன்புடன்
ஜமாலன்

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்