கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, January 10, 2009

புத்தாண்டின் புத்தம்புது முடிவு

தருமி அய்யா சாலியாக ஒரு பதிவு இட்டுள்ளார் , அதன் தொடர்ச்சியாக இந்தப்பதிவு.2008ன் இறுதி நாளில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் நான்,தருமி அய்யா,சீனா அய்யா, டிபிசிடி, மற்றும் சோலைஅழகுபுரம் பாலா ஆகியோர் கலந்து கொண்டோம். பிரபு ராஜதுரை அவர்களை ஆட்கொணர்வு மனு போட்டு தான் அடுத்தமுறை வரவைக்க வேண்டும்.மண்டல் கமிசன் பற்றி பேச்சு வந்த போது சந்திரமுகி சோதிகா மாதிரி திடீரென்று மாறிவிட்டேன்.இயக்குனர் சங்கரின் சென்டில்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து வந்ததையும்,அதன் பி்றகு அவருடைய படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணிப்பதையும் ஆவேசமாக கூறினேன்.(இந்தியன் மட்டும் கமலுக்காக பார்த்தேன்). மண்டல் கமிசனால் பலனேதும் இல்லாத சீனா அய்யா என்ன நினைப்பாரோ என்று சங்கடமாக இருந்தது. அப்பொழுதே உங்களுக்கு அவ்வளவு அறிவு இருந்ததா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய டிபிசிடி , அப்போது தான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.

பங்காருஅடிகளாரின் மகன் மதுரைக்கு வந்த போது தங்கள் வீட்டில் தங்கிய சம்பவத்தை சிறிது விளக்கினார் டிபிசிடி.அவருக்காக மற்றவர்கள் சைவச்சாப்பாடு உண்டதையும், அவர் குழுவினர் தனியறையில் அசைவ உணவை ஒரு கட்டு கட்டியதையும் கட்டுடைத்தார்.தன் காலில் விழுந்து ஆசி வாங்கியவர்களை அவர் சக்தி என்று அழைத்ததையும், காலில் விழாத தன்னை பிரதர் என்று அழைத்ததையும் சொல்லி கிச்சுகிச்சு மூட்டினார்.

லக்கி,கைப்புள்ள,சொள்ளுப்பாண்டி போன்றவர்களின் ஒட்டுமொத்தக்கலவையாக வருவார் என்று கட்டியங்கூறும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சோலைஅழகுபுரம் பாலா.பொறியாளராக பிஎசுஎன்எல்லில் பணியாற்றுகிறார்.

மாநாடு முடியும் நேரத்தில் பேச்சு சூடு பிடித்தது.தமிழ்க்கொலை புரிவதில் தவறேதுமில்லை என்னும் திடநம்பிக்கையுடன் எழுதும் போக்கைப்பற்றிய பேச்சு வந்தது.அதிர்ட்டப்பதிவரின் சமட்கிருதப்பாணி பெயரைப்பற்றியும் பேசப்பட்டது.கிரந்த எழுத்துக்களை பயன்படு்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற டிபிசிடியின் வாதத்தை மறுத்தார் தருமி அய்யா. ஜார்ஜ் என்ற தன்னுடைய பெயரை சார்சு என்றா கூற வேண்டும் என்று சொல்லி வெறுத்துப்போனார். ஏற்கெனவே வலைப்பதிவில் இந்த பெயர் விசயத்தில் ஜெயபாரதன் அய்யாவிற்கும்,நயனம் அய்யாவிற்கும் இடையே நடந்த பிரசித்தி பெற்ற சண்டை ஒன்று உள்ளது நினைவுக்கு வந்தது.பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமி அய்யாவின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன். இந்த இடத்தில் நன்னன் அய்யாவை துணைக்கு அழைத்துக்கொண்டேன்.அவரிடம் ஒருவர், 'தமிழ் என்பதை ஆங்கிலத்தில் tamil என எழுதுகிறார்களே இது சரியா?' என்று கேட்டார். அதற்கு நன்னன் அய்யா மிகவும் சரியானது தான்., அந்த மொழியில் பொருத்தமான ஒலியமைப்பு உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் கூறினார்.கிட்டத்தட்ட பேச்சு நிறைவடைந்து கிளம்பி விட்டோம்.

தருமி அய்யாவுக்கு இருக்கும் அதே பிரச்சினை எனக்கும் இருக்கிறது.என் மகள் ஜென்னியின் பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று நீண்ட நாளாக குழம்பிக்கொண்டிருந்தேன்.மொழி என்பது ஒரு கருவி தானே ஒழிய உணர்வு ரீதியாக பொருட்படுத்தத்தேவையில்லை என்பது பகுத்தறிவாளர் பார்வை, தருமி அய்யாவின் பார்வை இத்தகையது என்று தான் நான் நினைக்கிறேன்.எனக்கும் இவ்வாறான எண்ணமே இருந்தது.ஆனாலும் ஆழ்ந்து யோசிக்கும் போது மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது.ஜீசஸை யேசு என்பதும், க்ரைஸ்ட்டை கிறிஸ்து என்பதும்,ஷங்கராச்சார்யாவை சங்கரச்சாரியார் என்பதும் தான் நம் மொழியின் இசை.ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.இப்படி ஒரு முடிவை துணிந்து(!) எடுக்கத்தூண்டுதலாயிருந்த டிபிசிடிக்கு நன்றி.

சார் என்பதை ஸார் என்று எழுதும் உண்மைத்தமிழன் போன்றவர்கள் இந்தப்பதிவைப்படித்தால் கைகொட்டிச்சிரிப்பது உறுதி.

பி.கு:
மெய்யாலுமே கடைசி வரியை எழுதியவுடன் தருமி அய்யாவின் பதிவு முகவரியை தெரிந்துகொள்ள அங்கு சென்றால் , பின்னூட்டத்தில் உ.தமிழன் அங்கலாய்த்திருக்கிறார்.கொடுமையோ கொடுமை.

21 comments:

said...

//சார் என்பதை ஸார் என்று எழுதும் உண்மைத்தமிழன் போன்றவர்கள் இந்தப்பதிவைப்படித்தால் கைகொட்டிச்சிரிப்பது உறுதி.//

இதெல்லாம் அநியாயம் ஜாலிஜம்பர் ஸார்..

உங்கட பதிவுகள்லேயும் முன்னாடி ஜாலிஜாம்பர்ன்னுதான் இருந்துச்சு.. இப்பத்தான் நீங்க மனசு மாறி இந்த எழுத்துக்கு மாறிட்டீங்கன்னு நினைக்கிறேன்..

ஸார்ன்னு கூப்பிட்டால் என்ன..? சார்ன்னு கூப்பிட்டால் என்ன..? இரண்டு அர்த்தங்களும் ஒன்றுதானே..

தூய தமிழில்தான் எழுத வேண்டுமெனில் பதிவின் தலை முதல் கால் வரை திருத்தப்படுதல் வேண்டும். திருத்தப்பட்ட பிறகு மீண்டும் தொடர்ந்து அதேபோல் எழுதுவதற்கும் தமிழ் அறிவு வேண்டும். அந்த அறிவு இல்லாத என்னைப் போன்றோர் என்னதான் செய்வது..?

லூஸ்ல விடுங்க சாமியோவ்..

said...

"பிரபு ராஜதுரை அவர்களை ஆட்கொணர்வு மனு போட்டு தான் அடுத்தமுறை வரவைக்க வேண்டும்"

:-))

வீட்டுக்கு வாருங்கள்...பேசலாம்.

இயேசு என்பதுதான் சரியான உச்சரிப்பு. ஆங்கிலேயர் ஜீசஸ் என்று தவறாக உச்சரித்தால், நாமும் உச்சரிக்க வேண்டுமா?

ஜீசஸ் என்று வேண்டினால், இயேசு வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் போல என்று கவனிக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம்:-)

ஆங்கில ஜ பல சமயங்களில் ய என்ற உச்சரிக்கப்படும்.

said...

ரவி (சாலி சம்பருக்கு இது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.. :P )

தருமி ஐயா சொன்னதற்கும் ஒரு பதில் சொன்னேனே...

கிறித்துவ முன்னோர்களுக்கு அக்காலத்திலேயே இனனயான தமிழ்ச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் பெயரை வைக்கும் பொழுது அதற்கு இனையான பெயரை வைத்து இருக்கனும்..அதை விட்டுட்டு, நான் வைச்சிட்டேன் அதனாலே எல்லாரும் தமிழை இப்படியே எழுதுங்க என்று சொல்லுவது சரி இல்லை என்று அடக்கமாக எடுத்து இயம்பினேனே....

அதிர்ட்டம் = நல்லூழ்

மேலும் சரியான் தமிழ்ச் சொற்களை/கிழவிகளைப் (வார்த்தைகளை அல்ல..அல்ல) பற்றி அறிய தமிழறிஞ்சர் கோவியார்/ தமிழறிஞ்சர் குமரன் போன்றோரை அனுகவும். :)))

said...

வாங்க தமிழன்,
தெரியாமல் செய்யும் தவறுகளை பொருட்படுத்த வேண்டியதில்லை.ஸார் என்று வலிந்து பயன்படுத்தும் துக்ளக் பாணியைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

said...

வாங்க பிரபு சார்,
வீட்டுக்கு ஒருநாள் படைதிரண்டு வந்துவிடுகிறோம்.:-))

நல்ல தகவல்களுக்கு நன்றி.

ஒரு சந்தேகம்?
சீஸர், கெய்சர், ஜார் போன்ற சொற்களின் மருவிய ஒரு வடிவம் தான் ஜார்ஜ் என்ற சொல் என்பதாக எங்கேயோ படித்த நினைவு.இது சரிதானா?

said...

அடுத்த தடவை நிச்சயமாக அவர் வீட்டிலேயே சந்திப்போம்..அப்பத் தான் அவர் தப்ப முடியாது.. :))

//
Blogger சாலிசம்பர் said...

வாங்க பிரபு சார்,
வீட்டுக்கு ஒருநாள் படைதிரண்டு வந்துவிடுகிறோம்.:-))

நல்ல தகவல்களுக்கு நன்றி.
//

புத்தாண்டு சபதம் அவ்வளவுப் தானா..
:P

இப்படித் தான் சரியாக விளங்குமா இல்லையா என்று ஆங்கிலப்பெயர்களை கிரந்த எழுத்தக்களை உபயோகித்தே எழுதுறோம்..

ஆனா, ஆங்கிலேயர்களைப் பாருங்க..

திருநெல்வேலியயை தின்னவேலி ஆக்கினாங்க..

திருவனந்தபுரத்தை..டிரிவேண்டரம் ஆக்கினாங்க..

நாம் மட்டும் ஏங்க இப்படி வளையனும்..

வளைஞ்சி வளைஞ்சி கேள்விக்குறி ஆனதுப் போதும்...என்ன நாஞ்ச் சொல்லுறது.

//
சீஸர், கெய்சர், ஜார் போன்ற சொற்களின் மருவிய ஒரு வடிவம் தான் ஜார்ஜ் என்ற சொல் //

said...

//ரவி (சாலி சம்பருக்கு இது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.. :P )//
யோவ் அரவிந்து,
கட்டி இறக்கிவிட்டுட்டு இப்ப கிண்டலா இருக்கா?:-)).ஏற்கெனவெ வாலு நம்மள சாம்பாருன்னு சொல்லி லந்தடிச்சிருக்காரு.இன்னும் என்னென்ன சொல்லப்போறாய்ங்களோ?

//கிறித்துவ முன்னோர்களுக்கு அக்காலத்திலேயே இனனயான தமிழ்ச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் பெயரை வைக்கும் பொழுது அதற்கு இனையான பெயரை வைத்து இருக்கனும்..அதை விட்டுட்டு, நான் வைச்சிட்டேன் அதனாலே எல்லாரும் தமிழை இப்படியே எழுதுங்க என்று சொல்லுவது சரி இல்லை என்று அடக்கமாக எடுத்து இயம்பினேனே....//

ஆமாம்,தாமஸ் என்பதற்கு இணையாக தோமையார் என்ற சொல் உள்ளதையும்,மேலும் பல உதாரணங்களையும் சொன்னீர்கள்.தெரிந்த ஒருவர் தன்னுடைய மகன் பெயரான ஜேக்கப் என்பதை வெகு இயல்பாக ஏக்கப் என்றே அழைப்பார்.

said...

அரவிந்து,
ஒரு 13 வருசத்துக்கு முன்னாடி ஒரு இளநங்கையிடம் , எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒருவரின் பெயரைச்சொல்லி அவர் இப்போது திருவனந்தபுரத்திலா இருக்கிறார் என்று கேட்டவுடன் அந்நங்கை என்னை மேலும் கீழும் பார்த்தது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

//புத்தாண்டு சபதம் அவ்வளவுப் தானா..
:P//

:-))பாருங்க நம்ம மாதிரி தீவிரவாதிகளுக்கே இது சிரமமாக இருக்கிறது.

said...

"கடி"னமாக இருக்குதுன்னு சொல்லுறீங்க.. :P

உண்மை தான்..!!


//
Blogger சாலிசம்பர் said...

:-))பாருங்க நம்ம மாதிரி தீவிரவாதிகளுக்கே இது சிரமமாக இருக்கிறது.
//

said...

ஓ,சிரமம் என்று சொல்லக்கூடாதா?
முடியல அரசா.

said...

ஜாலி (நான் அப்படித்தான் எழுதுவேன்)

இங்க கொஞ்சம் வாங்க

ஜேக்கப் = யாக்கோபு

இந்த கிறித்துவப் பெயர்களை ஆங்கிலப்படுத்துவதெல்லாமே தமிழ்ப்படுத்துவதில் உள்ள ஆர்வமல்ல; just marketing!!

said...

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது குறித்த என் கருத்துகள்

said...

பதில்களுக்கு நன்றி தருமி அய்யா.

ரவிசங்கர், உங்களுடைய கிரந்தம் தொடர்பான மூன்று,நான்கு பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி.

said...

அண்ணே என்ன இது!
யாரையோ கிண்டல் பண்றமாதிரி இருக்கு!

ஜாலிஜம்பர்ல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா சாலிசம்பர்ல என்ன இருக்கு.

எதாவது நேரடி தமிழ் பெயர் வையுங்கள் இல்லைனா ஜாலிஜம்பரே இருக்கட்டும்!


தமிழின தலைவரே ஸ்டாலின்ன்னு தன் மகனுக்கு பெயர் வைக்கிறார்.
பெயரில் என்ன இருக்கிறது.

said...

வாங்க வாலு,
jollyjumper என்ற வேற்றுமொழிச் சொல்லை அப்படியே தமிழில் ஏற்றுக்கொள்ள தயக்கமேதும் இல்லை என்பதால் தான் சாலிசம்பர் என்று தமிழ்மயப்படுத்தியுள்ளேன்.

அதற்கு அருமையான தமிழாக்கங்கள் இருக்கின்றன.தருமி அய்யா வழங்கியது 'மகிழ்க்கூத்தன்', ஓகை அண்ணன் வழங்கியது 'மகிழெம்பர்'.இரண்டில் ஒன்றை பயன்படுத்துவதிலும் தயக்கமில்லை.

வழக்கப்போல கலைஞரை கிண்டல் பண்ணிட்டீங்க.தலைவருக்கு ஒரு பகிரங்கத்தந்தி போட்டுற வேண்டியது தான்.

said...

மரம் ,மறம் ரெண்டும் ஒரே ஒலி தான் தருது ஆனா ஒரு எழுத்து மாறுனதால அர்த்தமே மாறுது சென்னி, சாலி சம்பர் அப்படின்னு ஒரு எழுத்து மாத்தி கூப்பிடுரதுனால அந்த உண்மையான பேர்க்கான அர்த்தமே மாறுது.அண்ணே ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தன் பிள்ள தானா கொடைக்கானல்ல வளரும்ணே.அதனால ஜாலி ஜம்பர் அப்படின்னு முன்ன மாதிரியே பேர் வச்சிகோங்க சென்னியும் சாலி சமப் இன்னொரு பக்கம் தானா வளருவாங்க

said...

//லக்கி,கைப்புள்ள,சொள்ளுப்பாண்டி போன்றவர்களின் ஒட்டுமொத்தக்கலவையாக வருவார் என்று கட்டியங்கூறும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சோலைஅழகுபுரம் பாலா.//

அண்ணே! நிசமாத்தான் சொல்றீங்கீங்களா ???

என்ன ஒரு நம்பிக்கை அண்ணே, உங்களுக்கு ? :) :) :)

said...

வாங்க பாலா,
பொறுப்பு,வாய்க்கா,கிறுக்கன் எல்லாம் ரொம்ப பிடிச்சுப்போச்சு.சுருக்கமா சொல்லணும்னா ரணகளமா இருக்கு.சந்திப்பின் போது நீங்கள் சொன்னபடி உங்களுடைய பதிவின் கருவுக்கு ஆங்கிலக்கலப்பில்லாமல் எழுதமுடியாது என்பது உண்மை.

முடிந்தவரை குறைக்குமாறு நைசாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

said...

//மரம் ,மறம் ரெண்டும் ஒரே ஒலி தான் தருது ஆனா ஒரு எழுத்து மாறுனதால அர்த்தமே மாறுது சென்னி, சாலி சம்பர் அப்படின்னு ஒரு எழுத்து மாத்தி கூப்பிடுரதுனால அந்த உண்மையான பேர்க்கான அர்த்தமே மாறுது.அண்ணே ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தன் பிள்ள தானா கொடைக்கானல்ல வளரும்ணே.அதனால ஜாலி ஜம்பர் அப்படின்னு முன்ன மாதிரியே பேர் வச்சிகோங்க சென்னியும் சாலி சமப் இன்னொரு பக்கம் தானா வளருவாங்க//

நன்றி இசுபைடி,
கிரந்த எழுத்துகள் இல்லாமலே தமிழ் உயிர்வாழும் என்பதை ஈழத்தமிழ் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

said...

சாலி,

உங்கள் தொடர்ந்த ஈடுபாடு என்னை உன்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது..

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு"

இதை உங்களுக்கே வள்ளுவர் எழுதியிருப்பார் போலிருக்கு.

நடத்துங்க...:))

Anonymous said...

//என் மகள் ஜென்னியின் பெயரை தமிழில் எப்படி எழுதுவது//

வணக்கம் அண்ணன்,

ஈழத் தமிழர்கள் பலர் ஜெர்மனியை யெர்மனி என்று எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ஜென்னியை யென்னி என்று எழுதலாம் என்பது என்னுடைய கருத்து.

விஜய்கோபால்சாமி

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்