கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, November 29, 2007

உலகின் புதிய பாட்டாளிகள்


நான்கு சாலைகள் சந்திக்கும் பரபரப்பான சந்திப்பின் ஒரு ஓரத்தில் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை மணி 12.


வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் அந்தச்சாலையின் ஓரத்தில் டெலிபோன் வேலைகளுக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒருவருடைய மனைவி கைக்குழந்தை ஒன்று,மூன்று வயதுப் பெண்குழந்தை ஒன்று சகிதமாக ஓரமாக உட்கார்ந்திருந்தார்.தோண்டிப்போடப்பட்ட மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது அந்த மூன்று வயதுக் குழந்தை.என் மகளைப் போலவே நடுவகிடு எடுத்து ,ரெட்டைக்குடுமி போட்டு இருந்த அக்குழந்தையின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகி, வேதனையுடன் இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். "விற்பதற்கு உடலைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத பாட்டாளிகள்." பேராசான் காரல் மார்க்சின் சிந்தனைகள் மூளைக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.



வேலை முடிந்து மீண்டும் மண்ணை அள்ளி உள்ளே போட ஆரம்பித்த போது அந்தக் குழந்தை செய்த வேலை தான் என்னை அழ வைத்து விட்டது.தன் பங்குக்கு அதுவும் ஒரு சிறு மண்வெட்டியை எடுத்து மண்ணை அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டது.என் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட்டேன்.

ஏழையின் வீட்டில் பிறந்ததால் மூன்று வயதிலேயே அக்குழந்தை வெயிலில் இறங்கி வேலை செய்து பழக ஆரம்பித்து விட்டது.அதைப் போன்ற குழந்தைகளில் ஒரு 10 சவீதமாவது நன்கு படித்து ஒரு உயர்ந்த நிலைக்கு வரமுடியுமா என்பது சந்தேகமே.


அவர்கள் மீது ஏற்பட்டது பரிதாப உணர்ச்சி அல்ல, உலகின் கொடுரமான சூழ்நிலைகளில் ஒன்றை நேரில் பார்த்ததால் ஏற்பட்ட பய உணர்ச்சியாகக் கூட இருக்கலாம்.


வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.என்னை உர்ரென்று பார்த்தார்.ஊருல உள்ளவுகளுக்கெல்லாம் இரக்கப்படுங்க, எங்களையெல்லாம் பார்த்தா மனுசனா தெரியாது என்ற தொனியில் பார்வை இருந்தது.


நெஞ்சை அழுத்தும் எத்தனையோ சம்பவங்களை காலப்போக்கில் நாம் மறந்துவிடுவோம். ஆனால் என்றென்றும் இச்சம்பவத்தை மறக்க முடியாதபடி இளவஞ்சி எடுத்த போட்டோ அமைந்துவிட்டது.

Saturday, November 24, 2007

காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!



உடைந்து போன ஊசியைக் கூட செத்த பின்னால் மனிதனால் கொண்டு செல்ல முடியாது,எனவே அனைவரும் இறைவனைத் தொழுது,தன்னிடம் உள்ளதைப் பிறரிடம் பகிர்ந்து வாழ வேண்டும் என்று பிரபல சித்தர் பட்டினத்தார் வலியுறுத்துகிறார்.

இதைப் போன்ற சிந்தனைகள் நம்முடைய சித்தர்களுக்குத் தான் தோன்றும்,மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சிந்தனை மரபு இல்லை என்று தான் தோன்றுகிறது.பொருளாயத வாழ்க்கையை முற்றமுழுக்க அனுபவித்த ஒருவனால் தான் இப்படி சிந்திக்க முடியும்.நம் முன்னோர்கள் அப்படி ஒரு ராஜ வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.


இதே கருத்தை வலியுறுத்துவதாக இருந்த ஒரு மேலை நாட்டு கார்ட்டூன் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்தேன்.உலகின் மாபெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸை கிண்டல் செய்யும் கார்ட்டூன்.


மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் ஸ்லோகன் "WHERE DO YOU WANT TO GO TODAY?". சமாதி ஒன்றில் பில்கேட்ஸ் பெயரையும் அதற்குக் கீழே இந்த வாக்கியத்தையும் வரைந்து அருமையான ஒரு கேலிச்சித்திரம் உருவாக்கி இருந்தார்கள்.


அது இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன் , கிடைக்கவில்லை.அதனால் நானே வரைந்து பதிவு செய்து வைத்துள்ளேன்.


பில்கேட்ஸ் என்ற மாமனிதனை எப்படி கிண்டல் செய்துள்ளார்கள் பாருங்கள் மக்களே!

Tuesday, November 20, 2007

யானை மீதேறி பூனை பிடிப்பது எப்படி?

அறிவுத்துறையில் அர்த்தநாரீஸ்வரர்கள் இருக்கிறார்கள். உடல் அமைப்பிலே ஆணும்,பெண்ணும் பாதி பாதி ஒட்டிக்கொண்டு ஓருருவமாக இருப்பதில்லை.மனப்பான்மையிலே பழமையும்,புதுமையும் பாதிபாதியாக ஒட்டிக்கொண்டு பலர் இருக்கின்றனர்.அறிவுத்துறையிலே உள்ள இந்த அர்த்த நாரீஸ்வரர்களால் ஏற்படும் அவதி சொல்லுந்தரத்தக்கதல்ல.சகலவகையான புதுமைச்சாதனங்களையும் வசதிகளையும் பயன்படுத்தி மகிழத்தான் செய்கிறர்கள்.அதேபோது பழமையையும் பெருமையாகப் பேசிக்கொள்ளவும் பழைய ஏற்பாடுகள்,சிதைந்து போன சித்தாந்தங்கள்,தகர்ந்து போன தத்துவங்கள்,வெட்டி வேதாந்தம் இவைகளைக் கட்டி அழுவதோடும் நிற்காமல் போற்றிப் புகழவும் செய்கிறார்கள்.அடிக்கடி ரேடியோவில் கேட்கிறோமல்லவா திருப்பாவைக்கு அர்த்தம்,திருவாசகத்துக்கு உரை,இவைப்போல பேசும் அவர்களோ,பேசச்சொல்லும் ரேடியோ நிலையத்தாரோ,ஒரு தடவையாவது சிந்திக்கிறோமா,ரேடியோ என்ன வகையான சாதனம்-எந்தக் காலத்தது?எவ்விதமான அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது-இதனை-நாம் எந்தக் காரியத்திற்கு , எத்தகைய அறிவைப் பரப்பப் பயன்படுத்துகிறோம்ம் என்று எண்ணிப்பார்க்கிறார்களா? கிடையாது.ஏன்?அர்த்தநாரீஸ்வரர் மனம்!

குதிரை மீதேறிக்கொண்டு கொசு வேட்டைக்குக் கிளம்புவது,யானை மீதேறி பூனையைத் துரத்திப்பிடிக்க கிளம்புவது போன்று!

மூலம்:
http://www.arignaranna.info/kalanj_pagutharivu.htm

Monday, November 19, 2007

ஜோதிடம் உண்மையா? பொய்யா?.முடிவு என்ன?

விஜய் டிவியின் சென்ற வார நீயா,நானா நிகழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.ராசி பலன்கள் நம்மை ஆட்டுவிக்கின்றனவா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் சில காட்சிகளை பார்த்தேன்,படு காமெடியாக இருந்தது.பிரபல ஜோதிடர் கோழியூர் நாராயணன் (பத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக்கொண்டு ஜெயா டிவியில் வருபவர்) தலைமையில் ஒரு அணி.பகுத்தறிவாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஒரு அணி.



ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசி,லக்கினத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்குமாம்.கோழியூர் இதை நிரூபிக்க வேண்டி எதிர்தரப்பினரிடம் அவர்களது சில குணங்களை சொல்ல சொல்கிறார்.மூன்று பேரிடம் அவ்வாறு கேட்கிறார்,மூவரும் தமது சில குணங்களை சொல்கின்றனர்.கோழியூர் அவர்களுக்கான ராசி,லக்கினத்தை சொல்கிறார்,மூன்றுமே தவறான விடை.

கோழியூராரின் முகம் இருண்டுவிட்டது,எச்சிலைக் கூட்டி விழுங்குவதை க்ளோஸப்பில் காட்டுகின்றனர்.



அடுத்து சுப.வீ நல்ல ஒரு கேள்வி கேட்டார்.குஜராத் பூகம்பத்திலும்,கும்பகோணம் தீ விபத்திலும் அத்தனை பேர் ஒரே நேரத்தில் மாண்டார்களே,அவர்கள் அனைவருக்கும் ஒரே ராசி,லக்கனமா என்பதை சொல்லுங்கள் என்று கேட்கிறார்.அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.ஏன் இந்தக் கேள்வி கேட்டார் என்றால்,ஒருவனுடைய ஜாதகத்தை வைத்து அவன் எப்போது இறப்பான் என்பதை கூறமுடியும் என்பது ஜோதிட அறிஞர்களின் கூற்று.

நிகழ்ச்சியை முழுவதும் பார்த்து ரசித்தவர்கள் அதில் இடம்பெற்ற சூடான,சுவையான விவாதங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Saturday, November 3, 2007

என்ட குருவாயூரப்பா

இந்தியாவில் கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலம் கேரளா.அம்மக்கள் கலை,இலக்கியம்,கலாச்சாரம் போன்றவற்றில் சிறந்து விளங்க ஒரு முக்கியமான காரணம் கம்யூனிச இயக்கம்.அந்த மண்ணிலே தன் கொலைக்கரத்தை விரிக்கத் தொடங்கியிருக்கிறது இந்து மதவெறி சக்திகள்,அதன் விளைவு தினமும் நடக்கும் அரசியல் படுகொலைகள்.கட்சியை வளர்க்க இவர்கள் பயன்படுத்தும் துருப்புச்சீட்டு,இந்து மத உணர்வு.

கம்யூனிஸ்டுகளால் நன்றாக பண்படுத்தப்பட்ட அந்த மண்ணிலேயே இவர்கள் தங்கள் மொள்ளமாரித்தனத்தை நன்றாக அரங்கேற்றுகிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் இவர்கள் பருப்பு இன்னும் வேகவில்லை,அதற்கான முயற்சிகளிலே தீவிரமாக இருக்கிறார்கள்.

கேரளாவில் காலூன்ற முடிந்த இவர்களால் தமிழ்நாட்டில் ஏன் காலூன்ற முடியவில்லை?கேரளத்தவர் தங்கள் மொழி உணர்வு,இன உணர்வு போன்றவற்றை பின்னுக்குத்தள்ளி தேசியம் என்னும் வறட்டு உணர்வில் விழுந்தது தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

திடீரென்று இதை எழுதத் தோன்றியதன் காரணம் இன்றைய தினமலரில் வெளிவந்துள்ள இந்தச்செய்தி.
http://www.dinamalar.com/2007nov03/general_ind6.asp

பசுக்களை சரியாக பராமரிக்காததால் குருவாயூரப்பன் கோபமடைந்து உள்ளாராம்.மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இயல்பாக உள்ள கேரளாவில் எத்தகைய பொய்ப்பிரச்சாரம்.

எங்கெல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்களோ அங்கெல்லாம் மிகவும் வெறியோடு செயல்பட்டு வெற்றியும் அடைகின்றனர்.புத்தமதம் செழித்தோங்கிய பீகார்,காந்தி பிறந்த மண் குஜராத்,அடுத்து கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகிய கேரளா, நாளை தமிழகம்.

அப்பாவி மக்களின் ரத்தத்தில் கட்சியை வளர்க்க நினைக்கும் மதவெறி சிந்தனைகளுக்கு தமிழக மக்கள் என்றுமே இடம் தரக்கூடாது.தந்துவிட்டால் தென்காசியில் நடந்த குமார்பாண்டியன் படுகொலைகள் அன்றாட விசயமாகும் அவலத்தை யாராலும் தடுக்க முடியாது.

Friday, November 2, 2007

உயிரோடு விளையாடி



"பத்துத் தடவை பாடை வராது.

பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா...

செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்...

சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!"


காசி ஆனந்தனின் கவிதைக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்த தமிழ்ச்செல்வன் மற்றும் வீரர்களுக்கும் எமது வீரவணக்கங்கள்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்