கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, June 29, 2007

என் வாழ்வில் எட்டு சம்பவங்கள்

பதிவு ஒன்று இடுவதற்கு ஐடியாவையும்,வாய்ப்பையும் கொடுத்த தருமி ஐயாவுக்கு நன்றியையும்,எட்டு என்றாலே ஆகாது என்று எகிறி ஓடும் சமுதாயத்தில் எட்டாட்டம் ஆரம்பித்த புரட்சி வீரனுக்கு வணக்கத்தையும் செலுத்திவிட்டு என் எட்டை எடுத்து வைக்கிறேன்.

1.அப்போது எட்டு வயது இருக்கும்.பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என்னை ரகசியமாக அவ்வீட்டார் அழைத்துச் சென்றனர்.அவர்கள் வீட்டில் ஒரு பானை காணாமல் போய் விட்டது.அதை கண்டுபிடிக்கத்தான் என்னை அழைத்திருந்தனர்.வீட்டினுள் சென்று கதவு,ஜன்னல் எல்லாம் மூடி லைட் அணைத்து இருட்டாக்கி , ஒரு குத்து விளக்கை ஏற்றி என்னை அமர வைத்தனர். பின் ஒரு வெற்றிலையில் மையைத் தடவி அதில் பானை தெரிகிறதா என்று பார்க்க சொன்னார்கள்.நானும் உற்று உற்றுப் பார்த்து விட்டு ஒன்றும் தெரியவில்லை என்று சொல்லி விட்டேன்.

இவனுக்கு தெய்வசக்தி இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

2.ஆறாம் வகுப்பு படிக்கும் போது தமிழ் அய்யா சாதிக்கொடுமையை பற்றி அழகாக விளக்கினார்.பாடத்தில் இல்லாத ,வாழ்க்கைக்குத் தேவையான பொதுவான விசயங்களை பேசும் ஆசிரியர்கள் வெகு சிலரே.ஒருவனை தாழ்ந்த சாதி என்று கேவலப்படுத்தினால் இன்னொருவனிடம் சாமி என்று காலில் விழ நேரிடும் என்று அவர் போதித்தது மண்டையில் வலுவாக ஏறி விட்டது.

3.ஒன்பது,பத்தாம் வகுப்புகளில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு மரத்தடி பிள்ளையார் கோவில் இருந்தது.தேர்வு சமயங்களில் கோவிலை கடக்கும் போது நண்பர்கள் திடீரென நின்று அதைச் சுற்றி வணங்குவார்கள்.
நாம் தேர்வு எழுதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திப்பேன்.

4.கல்லூரியில் சேர்ந்தவுடன் துறைத்தலைவி சொன்னார் "பூவை எட்ட நின்று ரசி.பறித்து ரசிக்க என்ணாதே" என்று.அவர் சொன்னது பெண்களைப் பற்றி.

5.1992 ஜெ பதவிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது.எங்கள் தமிழ் அய்யாவிடம் கேட்டேன் "ஏன் இந்த அம்மா இந்த ஆட்டம் போடுகிறார்" என்று.அதற்கு அவர் உடனே சொன்ன பதில்"என்னப்பா செய்யுறது?அந்தம்மாவுக்கு ஒரு மூக்கணாங்கயிறு யாரும் மாட்டலையே".அவர் திருமணத்தைத் தான் அப்படிச் சொன்னார்.திருமணம் பெண்களை எப்படி அடிமையாக்குகிறது என்று புரிந்து கொண்டேன்.
(அந்தத் தமிழ் ஐயா இன்று ஜெயா டிவியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்)

6.Origin of Life,Evolution of Man சொல்லிக்கொடுத்த ஆசிரியர்,ஒரு நாள் மாணவர்களுக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அது விளையாட்டாக செய்தது என்றாலும் கூட.கல்வியின் லட்சியம் படித்து பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்வது என்ற அளவில் தான் அவருக்கு இருந்தது.கல்வியின் மேல் ஒருவித அலட்சிய மனநிலை வருவதற்கு அது ஒரு காரணமாக அமைந்தது.

7.ரொம்ப நாளாக ஒரு யானையை கட்டி தீனி போட்டுக் கொண்டிருந்தேன்.அதாவது ஒரு புல்லட் பைக் வைத்திருந்தேன்.புல்லட் ஓட்டுவதில் ஒரு வசதி போலீசார் தொல்லையிலிருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம்.கிட்டத்தட்ட 11 வருடங்களாக ஓட்டியதில் இரண்டே முறை தான் போலீசார் நிறுத்தியுள்ளனர்.அது ஒரு பெருமை எனக்கு.ஒரு முறை இரண்டு நண்பர்களோடு மூன்று பேராக பயணம் செய்த போது பின்னால் இருந்த நண்பன் ,போலீசிடம் சிக்கினால் வீணாக பைன் கட்ட வேண்டுமே என்று புலம்பிக்கொண்டே வந்தான்.நானோ அதெல்லாம் யாரும் நிறுத்த மாட்டார்கள் என்று பந்தாவாக சொல்லி வாய் மூடுவதற்குள் எங்கிருந்தோ திடுமென முளைத்த ஒரு சார்ஜண்ட் வண்டியை நிறுத்தினார்.

வாயை வைக்காதே என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.அதன் சக்தியை அன்று தான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

8.எங்கள் பாட்டி இறந்த அன்று நண்பர்கள் செய்த கலாட்டாவில் நான் துக்க வீடு என்பதையும் மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.என்னை நானே
நொந்து கொள்ளும் விசயம் இது.சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் முகத்தை வைத்துக்
கொள்ளும் கலையில் நானொரு கத்துக்குட்டி.

நான் அழைக்கும் பதிவர்கள்.
1.பூக்குட்டி
2.உடன்பிறப்பு
3.பகுத்தறிவு
4.selva
5.முத்து தமிழினி
6.neo
7.மிதக்கும்வெளி
8.வரவணையான்

Saturday, June 23, 2007

உலகின் கடிமன்னன் யார்?

NATONAL GEOGRAPHIC சேனலில் பார்த்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.அனைத்து மிருகங்களிலும் கடிக்கும் திறன் அதிகம் உள்ள மிருகம் எது என்பதை அவர்களுக்கே உரிய தொழில்நுட்ப கருவிகளோடு விளக்கினர்.

அவர்கள் தேர்ந்தெடுத்த மிருகங்கள் , நாய்,சிங்கம்,மனிதன்,கழுதைப்புலி,சுறாமீன்,ஆமை,
முதலை,காட்டுநாய் முதலியவை ஆகும்.

இதன் முடிவுகள் நாம் நினைப்பதற்கு மாறாக உள்ளது.
இதில் கடைசியில் இருப்பது மனிதன்.கடிதிறனை பவுண்டுகளில் சொல்கிறார்கள்.

மனிதன்-127
காட்டுநாய்-317
வீட்டுநாய்-327
சுறாமீன்-660
சிங்கம்-691
கழுதைப்புலி-1000
ஆமை-1004
முதலை-2500

இதில் சிங்கத்தை விட கழுதைப்புலி (HYENA) பயங்கரமாக கடிக்கிறது.அதை விட ஆச்சரியம் ஆமை தான்.அந்த ஆமையின் எடை வெறும் 43 கிலோ தான்.ஆனால் இப்படி ஒரு சக்தியை வெளிப்படுத்த எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.

முதலையிடம் சிக்கினால் நம்மை பீஸ் புரோட்டாவாக ஆக்கி தின்று விடும் என்பது நமது உள்ளுணர்வுக்கு தெரியும்,அதனால் அதன் அருகில் செல்லத் துணிய மாட்டோம்.

ஆனால் ஆமை தானே என்று அலட்சியமாக நடந்து கொண்டால் கையை,காலை காவு கொடுக்க நேரிடும் என்று எச்சரிப்பதே இப்பதிவின் நோக்கம்.

Monday, June 18, 2007

தெய்வத்தின் குரல்

மகா பெரியவா என்று அழைக்கப்படும் இறந்து போன சங்கராச்சாரியாரைப் பற்றி தெரிந்த ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் இவர் சொல்லியுள்ளார் "இந்துக்கள் அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எல்லோரும் கூறுகின்றனர்.ஆனால் அனைத்து இந்துக்களும் ஏற்றுக்கொள்வது இருக்கட்டும்.முதலில் பிராமணர்கள் அனைவரும் என்னை ஏற்றுக்கொள்கிறார்களா?இல்லையே" என்று ஏக்கப்பெரு மூச்சு விடுகிறார்.

ஒரு சாதிச்சங்கத்தின் தலைவராகவே இருக்க விரும்புகிறவர் எப்படி இந்துக்கள் தலைவராக முடியும்?

கன்ணதாசன் போன்றவர்கள் இவருக்கு வக்காலத்து வாங்குவது தான் புதிராக இருக்கிறது?பெரியவாளைப் பற்றி "அவர் ஒரு பிராமணர் என்பதாலேயே அவரை ஒதுக்குவது புத்தியுள்ளவன் காரியமாகாது.அவர் ஒரு நாளும் ஜாதிவெறியராகவோ, மதவெறியராகவோ இருந்ததில்லை"என்று சொல்கிறார்.

கண்ணதாசன் மறைவிற்குப் பின் தான் தெய்வம் இந்த வாக்குமூலத்தைக் கொடுத்ததோ என்னவோ?

Sunday, June 17, 2007

மூன்றாவது அணியை வரவேற்கிறேன்.

ஜெ தலைமையில் இந்திய அரசியலில் காங்,பாஜக வுக்கு போட்டியாக மூன்றாவது அணி தோன்றியுள்ளது.

தேசியக்கட்சிகள் வலுவிழந்து பிராந்தியக் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நேரமிது.

பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சி இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்குமா?நிச்சயமாக விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.

என்றோ ஒருநாள் தேசியக்கட்சிகளான காங்,பிஜேபி முற்றிலும் அழிந்து போய் வெறும் பிராந்தியக் கட்சிகள் மட்டுமே இருந்தால் இந்திய அரசு எப்படி அமையும்?அதன் தலைவராக யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்க கட்சிகளுக்கு என்ன தேவை இருக்கும்?

டெல்லியில் இருக்கும் இந்திய அரசு தனது ஆக்டோபஸ் கரங்களை எல்லாப்புறமும் விரித்து தன் பிடியில் வைத்துள்ளது.மாநிலக் கட்சிகள் தலையெடுத்து அக்கரங்களை கடிக்க ஆரம்பித்தால் அது தனது கரங்களை சுருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதற்காகவாவது ஜெ தலைமையிலான மூன்றாவது அணியை வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, June 16, 2007

கேளுங்கள் தரப்படும்?

பகுத்தறிவாளனின் ஒரு பதிவில் நான் கேட்ட ஒரு கேள்வியும் அவர் அளித்த பதிலும் கீழே உள்ளது.



கேள்வி:

கர்த்தரின் கருணை யேசுவுக்கு மட்டுமா?எல்லோருக்குமா?இறந்து போன என் பாட்டியை திரும்பக் கேட்டு கதவைத் தட்டினால் காரியம் நடக்குமா?



பகுத்தறிவாளனின் பதில்:

நல்ல ஓர் கேள்வி.ஜாலி ஜாம்பர், நான் இங்கே கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்யவரவில்லை.நன்றாக பதிவுக் கருத்தை கவனிக்கவும். பைபிளில் இருக்கும் ஒரு கருத்தை இல்லை என தனது 53 வருட பில்டப்பின் மூலம் சாதித்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் ஒருவருக்காக கொடுக்கப்பட்ட பதில் இது.நீங்கள் உடனடியாக ஒரு பாதிரியாரை சந்தித்து உங்கள் கேள்வியைக் கேட்கலாம்.எனினும் ஒரு முஸ்லிமாக இதற்கு என் பதில்,கண்டிப்பாக கர்த்தர் கேட்டதை கொடுப்பார்; தாராளமாக கேளுங்கள். கேட்பதில் உங்களுக்கு சோர்வு மட்டும் வந்து விடவேண்டாம்.



ஒரு முஸ்லிமாக இன்னொரு மதக் கடவுளை ஏற்றுக்கொண்டதற்கு நிச்சயமாக அவர் பாராட்டுக்குரியவர்.



ஆனால் அவர் அளித்துள்ள பதில் அறிவு பூர்வமாக ஏற்க முடியாததாக உள்ளது.சென்ற வாரம் கோவையில் நடந்த ஒரு சம்பவமே இதற்கு சரியான உதாரணம்.



இறந்து போன தன் சகோதரனின் பிணத்தை வைத்து கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக கர்த்தரிடம் பிரார்த்தனை செய்துள்ளார் ஒருவர்.இதை காவல்துறை கண்டுபிடித்து சென்று பார்த்த போது ஒரு குடும்பமே பிணத்தை சுற்றி அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்து உள்ளது.பிணம் எலும்புக்கூடாக இருந்துள்ளது.



பிரார்த்தனை செய்த சகோதரர் மேல் மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது காவல்துறை.

பகுத்தறிவாளன் போன்றவர்கள் தெரிந்தே செய்யும் பிரச்சாரத்தால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் தான்.

Friday, June 15, 2007

இவர் யார் என்று தெரிகிறதா?

நடிகர் சந்திரசூரியன் கர்நாடகத்தில் பிறந்தவர்.ஏழு வயதிலேயே நாடக நடிகராக தமிழகத்தில் குடியேறியவர்.

பாய்ஸ் கம்பெனியில் கிருஷ்ணன் வேஷம் போட்டால் பார்க்க வந்திருப்பவர்கள் எல்லாம் கையெடுத்து கும்பிடுவார்கள்.

ஏழைத்தாய்க்கு மகனாகப் பிறந்த அவர், ஏழு வயதிலிருந்தே தான் சம்பாதித்து தாயைக் காப்பாற்ற வேண்டியவராக இருந்தார்.

அந்நாளில் நாடகங்கள் இரவு ஒன்பது மணி வரை நடக்கும்.

நடிக்கின்ற பையன்கள் படிக்கின்ற படிப்பே நாடக வசனம் தான்.
மாதம்பூராவும் கத்தி முடித்த பிறகு கையில் கிடைக்கும் சம்பளம் ஐந்து ரூபாய்.

அளந்து போடும் சாப்பாடு .அதற்கு மேல் கிடையாது.சந்திரசூரியன் போடாத வேஷம் இல்லை.

தர்மன் வேஷமும் போட்டிருக்கிறார்,துரியோதனன் வேஷமும் போட்டிருக்கிறார்.

ஆகவே இரட்டை வேஷம் போடுவதென்பது அவர் பின்னாளில் கற்றுக்கொண்டதல்ல;வளரும் போதே விழுந்த உரம்.

நாடகத்தில் இருந்து அவர் சினிமாவுக்கு தாவிய போது படத்துக்கு நானூறு ரூபாய் என்று தான் வாழ்க்கை ஆரம்பமாயிற்று.

அப்போது முண்டி முண்டிப் பார்த்தும் வாழ்க்கையில் முன்னேறமுடியவில்லை.

கையிலே ஜெபமாலை கழுத்திலே உத்திராட்ச மாலை,நெற்றியில் விபூதி,குங்குமம்,இளம் பருவத்து பக்தகோடியாக அவர் காட்சியளித்தார்.

அப்போதும் மாதரர் ஆசை அவரை மயக்கி இழுக்கும்;மனசு பயந்து கைகள் நடுங்கும்.

ஆள் அழகாக இர்ந்தாலும் அந்நாளில் அவரை விரும்பிய பெண்கள் அதிகமாக இல்லை.

முகத்திலே பாவம் வராவிட்டாலும் நடிப்பிலே ஒரு துடிதுடிப்பிருக்கும்.

இருந்தும் பயன் என்ன?

தொழிலில் முன்னேற முடியவில்லை.

அவர் சங்கீதக் களஞ்சியமாக இருந்தால் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்.

இணை இல்லாத நடிப்புத்திறன் இருந்தால் ஏதாவது ஒரு கூட்டம் சேர்ந்திருக்கும்.

இரண்டும் இல்லாத காரணத்தால் தனக்கென்று ஒரு கூட்டத்தை அவரே தேடிப்பிடிக்க விரும்பினார்.

தான் பேசும் கூட்டத்துக்கு ஆள் வராவிட்டால்,ஆள் இருக்கும் மேடையைப் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை அவர் கூர்ந்து கவனித்தார்.

ஏதாவது ஒரு முத்திரையைப் போட்டுக்கொண்டால் தான் தன் எதிர்காலம் பத்திரமாக இருக்கும் என்று நம்பினார்.

அன்னை பராசக்தியின் அருளால் அவருக்கு அரசியலில் சில நண்பர்கள் கிடைத்தார்கள்.

கிடைத்த நண்பர்களோ இங்கர்சாலின் மாப்பிள்ளைகள்,காரல் மார்க்ஸின் பேரப்பிள்ளைகள்.

நடிகர் சந்திரசூரியனோ சிறந்த பக்திமான்.

தத்துவரீதியாக அவர்கள் உறவு ஒத்துவராது.

இவருக்காக தங்கள் கொள்கையை அவர்கள் விட்டுவிட முடியுமா?

ஆகவே அவர்களுக்காக இவர் தனது பக்தியைக் கைவிட்டார்.

கையில் இருந்து ஜெபமாலை நழுவிற்று;புரிகிறதோ இல்லையோ காரல்மார்க்ஸின் புத்தகம் குடியேறியது.

தானும் அரசியல்வாதி தான் என்று மேடையேறினார்;பேச ஆரம்பித்தார்.

அவர் எப்போது பேச ஆரம்பித்தாலும் "மனிதன் ஏன் பிறக்கிறான்?"என்று தான் ஆரம்பிப்பார்.

பெரிய விஷயங்களை சொல்லப் போகிறார் என்று ஜனங்கள் எதிர்பார்க்கும் போது "உலகத்திலேயே நான்தான் யோக்கியன்" என்று முடிப்பார்.

படத்திலே அவர் வில்லன் வேஷம் போட்டாலும் நல்லவனாகத் தான் நடிப்பார்.அரசியலிலே நல்லவனாகத் தோற்றமளித்தாலும் வில்லனாகத்தான் இருப்பார்.அரசியல் மூலம் சினிமாவுக்கு கூட்டம் சேர்ப்பது.சினிமா மூலம் அரசியல் லாபம் தேடுவது இரண்டிலும் அவர் வல்லவர்.

ஒரு சமயம் அவர் கட்சிக்காரர்கள் நம் படத்தை பார்ப்பதை விட, கட்சிக்குள்ளேயே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார்.

ஆட்களைப் பிடித்தார்,போர்டுகள் எழுதுவதற்கு ஆர்டர்கள் கொடுத்தார்,தன் பெயரில் வீரபராக்கிரம சங்கங்கள் பலவற்றை ஆரம்பித்து விட்டார்.

ஒவ்வொரு படமும் வெளிவரும் போது தானே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுத்து விடுவார்.

மற்ற நடிகர்களின் படமாக இருந்தால் அதைக் கேலி செய்வதற்கும்,வெளியே வரும் போது 'படம் மட்டம்' என்று சொல்வதற்கும் தானே டிக்கெட் வாங்கி கொடுத்து விடுவார். தன்படமாக இருந்தால் கைதட்டி விசில் அடிப்பதற்கும்,'படம் பிரமாதம்' என்று சொல்வதற்கும் ஆள் அனுப்புவார்.

அவரது சேனை வீரர்கள் அதிகமாகக் கையாளும் ஆயுதம் சாணம்.

எதிரிகளின் போஸ்டர்களைக் குறிவைத்து சாணி அடிப்பதில் அவர்களுக்கு ஈடு இணை கிடையாது.

இந்திய ஜனநாயகத்தில் எந்தத்தகுதியும் இல்லாமல் யாரும் எந்தப் பதவியையும் அடைய முடியும்.

ஜனநாயகம் கொடுத்த அந்தச் சலுகையை யோக்கியர்கள் பயன்படுத்திக் கொண்டதை விட அயோக்கியர்கள் பயன்படுத்திக் கொண்டதே அதிகம்.

நடிகர் சந்திரசூரியன் அயோக்கியரல்ல.கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ராஜதந்திரத்தில் வல்லவர்.

சொல்லப்போனால் சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதில் மட்டுமல்லாது,சில நேரங்களில் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதிலும் அவர் கெட்டிக்காரர்.

பத்து வருஷம் ஜெயிலுக்குப் போன தியாகிகளை ஏறி மிதித்துக் கொண்டு , மக்கள் சந்திரசூரியனை தொட்டுப்பார்க்க விரும்புவார்கள் , என்றால் அது ஒன்றும் சாதாரணத் திறமையில்லையே.

'மக்கள் முட்டாள்கள்' என்று ஒரு வரியில் சொல்லிவிடுவது சுலபம்.ஆனால் பல லட்சம் மக்களை முட்டாள்கள் ஆக்குகிற சக்தி ஒருவனுக்கு இருக்கிறது என்றால் , அதை வியப்போடு பார்த்து பாரட்ட வேண்டியது முக்கியம் அல்லவா!

ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் ஐம்பது ரூபாயாவது தர்மம் செய்வார்.

ஆனால் அந்த ஐம்பது ரூபாய் தர்மத்திற்கு ஐயாயிரம் ரூபாய் விளம்பரம் கிடைக்கிறதா என்று பார்த்து தான் செய்வார்.

அவரது குணாதிசயங்கள் விசித்திரமானவை.

தன்னை விட்டு விலகி நிற்பவனைக் கட்டியணத்துப் பக்கத்தில் கொண்டு வந்து விடுவார்.

அவன் பக்கத்தில் வந்ததும் எட்டி உதைத்து அவமானப்படுத்தி விடுவார்.

பி.கு:
கண்ணதாசனின் "அரங்கமும்,அந்தரங்கமும்" புத்தகத்தில் இருந்து இங்கே சில பக்கங்களை பதிந்துள்ளேன்.

Sunday, June 10, 2007

பேய்கள்-ஒரு திறனாய்வு

கடவுள் இல்லையென்று கறாராக மறுத்துக் கூற முடியும் என்னால் பேய்கள் இல்லையென்று கூற முடியுமா? முடியாது.பேய் பயம் என்னைப் பிடித்து ஆட்டுகிறது.நடுஇரவு சுடுகாட்டுக்கோ,பிணவறைக்கோ என்னால் போக முடியாது.பேய் இல்லையென்று நிச்சயமாகச் சொன்னால் நடுஇரவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிய வேண்டும்.அது முடியாத போது பேய் இருக்கிறதென்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.என்னுடைய இந்த சிந்தனைகளை ஊக்குவிப்பது போல்,கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்பதைப் பற்றியெல்லாம் எதுவும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாத NATIONAL GEOGRAPHIC,DISCOVERY CHANNEL போன்றவை பேய் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் ஒரு மனிதரின் அனுபவமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்ட்.நாத்திகர்.அவர் ஒருமுறை ஒருவரை சந்தித்ததாகவும் அவர் ஒரு 20 அடி தூரம் தள்ளி நின்று இவருடைய கையிலிருந்த புத்தகத்திலுள்ள வரிகளை அப்படியே வாசித்ததாகவும் அது சில அமானுஷ்ய சக்திகளால் தான் முடிந்தது என்று அவர் கூறுவதாகவும் இந்த கம்யூனிஸ்ட் நண்பர் கூறி வியந்து போனார்.அவர் 60 வயது நிரம்பிய நல்ல மனிதர்.அவருடைய கூற்றைப் புறந்தள்ள என்னால் முடியவில்லை.

ஆகவே நண்பர்களே பேய் பற்றிய தெளிவான ஒரு சிந்தனையை எனக்கு வழங்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, June 9, 2007

திராவிட மாயை-டி.பி.ஆர்.ஜோசப் அவர்களுக்கு மறுப்பு

டி.பி.ஆர்.ஜோசப் அவர்களுக்கு மறுப்பாக இந்தப்பதிவு.

40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு கெட்டுப் போய்விட்டது என்ற விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
40 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலும் , தேனும் ஓடிக்கொண்டிருந்ததா என்ன?
தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்து இருக்கும்வரை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இருக்கும்.
40 ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசில் தமிழகத்தின் பங்கு என்ன?இன்று இந்திய அரசில் தமிழகத்தின் பங்கு என்ன?
இதற்கு யார் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லும் அளவுக்கு சென்னையில் கார்
தொழிற்சாலைகள் கொண்டு வந்தது யார்?
40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் சொர்க்கபூமியாக இருந்தது என்று சொன்னால் நாங்கள் அதை நம்ப வேண்டுமா?
கோயிலில் போய் சாமி கும்பிடுவதையே உங்களிடம் போராடித்தானே பெற வேண்டியிருந்தது.பள்ளிக்கூடம் சென்று படிக்கவே
உங்களிடம் போராட வேண்டித்தானே இருந்தது.இந்தப் போராட்டங்கள் எல்லாம் திராவிடர்கள் செய்யாமல் பிராமணர்களா செய்தார்கள்?
இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு ஒரே காரணம் பிராமணர்களின் ஆதிக்கத்தை இங்கு ஒழித்ததால் தான்.
தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தகைய கேடுகெட்ட செயலையும் செய்யத்தயாராய் இருப்பவர்கள்.
இவர்களின் சதிக்கு இரையான இரு மாநிலங்கள் பிஹார் மற்றும் குஜராத்.
புத்த விஹாரங்கள் நிறைந்து அதனாலேயே பிஹார் என்று அழைக்கப்பட்ட பண்பாட்டின் சின்னமாக விளங்கிய அந்த தேசம்
காட்டுமிராண்டி தேசமாக மாறியது தற்செயலானதா?
மனித கடவுள் மகாத்மா அவதரித்த புண்ணியபூமி இன்று மதவெறியர்களின் கோட்டையானது தற்செயலானதா?
இல்லவே இல்லை.
பெரியார்,அண்னா,கலைஞர் போன்ற மேதைகளை பெற்றெடுத்த இந்த தமிழ்நாட்டையும் சீரழிப்பதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பல
நடவடிக்கைகளின் ஒரு பகுதி தான் இந்த விஷமப் பிரச்சாரம்.
தமிழ்நாடு இப்படி நாசமாய்ப் போய்விட்டதே என்று ஒப்பாரி வைக்கும் ஓநாய்க் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்துள்ளது
காணச் சகியாததாய் உள்ளது.

Wednesday, June 6, 2007

எம்.ஜி.ஆர் ஏன் விலகினார்?


அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் தலைமையில் மதுரையில் நடக்கும் மாநில மாநாட்டுக்கு
எம்.ஜி.ஆர் தனது காதலி ஒருவரை மாநாட்டு மேடையில் அமர வைக்க கலைஞரிடம் வேண்டுகிறார்.கலைஞரோ அக்காதலி யாரென தெரிந்து அதிர்ந்து போய் இது நமது இயக்கத்துக்கு விரோதமான செயலாக அல்லவா அமைந்து விடும் என்று எடுத்துக் கூறுகிறார்.காதலியின் மீதுள்ள மோகத்தில் எம்.ஜி.ஆர் விடாப்பிடியாக இருக்கவே,மாநாட்டுத் தலைவரான மதுரை முத்துவிடமே
போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.மதுரை முத்துவோ அப்பெண்மணியை அழைத்துக் கொண்டு மதுரை வந்தால்
ஊர் எல்லையிலேயே உங்களை திருப்பி அனுப்பி விடுவேன் என்று எச்சரிக்க வேறு வழியில்லாமல் எம்ஜிஆர் தனது காதலிக்கு
மாநாட்டு மேடையிலும் , திமுக விலும் இடம் பிடிக்கும் முயற்சியைக் கைவிடுகிறார்.

எம்ஜிஆர் திமுக வை விட்டு விலகியதற்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பதை விட முக்கியகாரணமே இது மட்டும் தான் என்பது தான் உண்மை.

அதற்குப்பின் பல கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறிய எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து,ஆட்சியைப் பிடித்து,அதே மதுரையில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டில் தன் காதலியை ஆடவிட்டு ரசித்ததும் வரலாறு.

எம்ஜிஆர் என்ற இழிதகையின் அந்த அடாத செயலால் , துரோகத்தால் எந்த ஆதிக்கசக்திகளை ஒடுக்க போராடினார்களோ,அதே
ஆதிக்க சாதியில் இருந்து ஒரு பெண்மணி ,திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய கட்சிக்குத் தலைவராகி இந்தத் தமிழ்நாட்டையும்
இரண்டு முறை ஆண்டதை நம்மைப் பீடித்த சனி என்று சொல்லித்தான் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்.

Sunday, June 3, 2007

வாலியின் வார்த்தை ஜாலம்

டிசம்பர் 2000 இல் நடந்த ஒரு விழாவில் வாலியால் வழங்கப்பட்ட கவிதை இது.நான் மிகவும் ரசித்த இக்கவிதையை தானைத்தலைவனின் பிறந்த நாளான இன்று வலைப்பதிவில் ஏற்றி மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றேன்.


நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும்;தமிழ்க்
கடவுளெனக் கண்முன் எழும்...


மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில்-ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!


நூற்கடல் முத்துவேலர்-ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுகத்தன்னை
பயந்தநல் அமுதமே!


மடமையில் உறங்கும்-இந்த
மண்விழிக்க வேண்டி-ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!


சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்!உன்
தகவு அடங்குமோ-என்
தமிழுக்குள்?பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ-சின்ன
சிமிழுக்குள்?


என்னிடத்தில்
ஏது-உன்
சீர்த்தியைச்சுட்ட-ஒரு
சொற்குறி?


உன்
விஷயத்தில்
தலைவா!நானொரு
தற்குறி!


கறுப்பு சிவப்பு
கரைகொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதயசூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல்படித்து-உன்னுள்
இடம்பிடிக்கும் உடன்பிறப்புக்களின்
இதயசூரியனே!


ஞான
ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்!


பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!


அணுவளவும் குறையாது-உன்
ஆரோக்கியம்!முன்னம்
அரசாண்டவர்களில்-உன்னைவிட
ஆர்யோக்கியம்?


சிலர்
வாழ்ந்த வாழ்வை-அவர்களது
வண்டவாளம் சொல்லும்;உன்
தியாகவாழ்வை-கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!


நிச்சயம்-நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது...


தீர்க்கசுமங்கலியாம்
தயாளுஅம்மாளின்
தாலிபாக்கியம்;அதுவே இந்த
வாலி பாக்கியம்!


ஊராளும்
உத்தமனே!
உன்பெயர் சொல்லி-தன்
உச்சந்தலையில்-தினம்
பூசாத்திமகிழும்-பெண்ணரசி
ராசாத்தி துணைவா-இரு
நங்கையர் திலகங்களுக்கும்-நீ
நெடுங்காலம் துணைவா!


சிம்மாசனத்திலும்;தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்...
கொலுவமர்ந்து-செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?


வேலையில் மூழ்கிவிட்டால்-உன்
விழிகள் தூங்கா;
நாட்டவர்நலத்தை-உன்
நினைப்புகள் நீங்கா;உன்
கோட்டை மேசையில்
கோப்புகள் தேங்கா;உன்னால்
ஆனதய்யா-தமிழ் பூமி
அமைதிப்பூங்கா!


நீ
'ஏ.எம்' முதல்
'பி.எம்' வரை
சலிக்காது உழைக்கும்
'சி.எம்'.


நீ தேசுமிகு-தமிழ்த்
தேயம்-தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!


முத்தமிழ் வித்தகமே!கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை
உன்னை இனி
வெல்லுமோ புடவை!


நிச்சயம்
நாளைய தேர்தல்-இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா!நீயே தான்
அடுத்த முதல்வன்
அஞ்சுகம் மைந்தா


தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே-மாநகரத்
தந்தையின் தந்தையே
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே;இனி
உழவர் பெருமக்கள்-
உடுக்கமாட்டார் கந்தையே!


சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா!உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர்கள் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!


சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
'வந்தபின் பார்ப்போம்' என்று;
வள்ளலே!நீ தான் சொன்னாய்
'வருமுன் காப்போம்' என்று!


சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்;அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்


இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!


ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்;இது காறும்
'டூ' விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!


நாடாளும்
நல்லவனே
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!


அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
'அன்பின் வழியது உயிர்நிலை!' என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!


மாண்புமிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே.


'அக்கா மகன்' என்ற அளவிலா
அன்பு காட்டினாய்?நீயே பெற்ற
பக்காமகன் என்று அல்லவோ
பாசம் ஊட்டினாய்!


அந்நாளில்-உன்னை
அனேகம் பேர் அழைப்பர்-உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
'மு.க,,மு.க' என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!


இனிய தலைவனே!நீ
இன விடுதலைக்காக...
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!


அதனால் தான்
அய்யா!நீ...
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!


உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்...
நீ
தடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!


நீ
வாலறிவன்;உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
'நன்று!நன்று'
எனக்களித்தாய்;இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!


பெரியவனே!நீயெனைப்
பெரும்புகழ் என்னும்...
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்;நான்
வாழ்நாளெல்லாம் நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்
.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்